12 Comments

  1. 2008-ம் ஆண்டு ஜீவாவின் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, லட்சுமிராய், கங்கனா ரனாத், ஜெயராம், ஸ்ரீநாத் மற்றும் பலரது நடிப்பில் வெளியான "தாம் தூம்" திரைபடத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் இந்தப் பாடல்:

    "எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு
    எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு "

    பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் சிந்திக்க வைக்கும் தேன்தமிழ் வரிகள்!
    பல வெற்றிப் படங்களுக்கு இசையின் மூலம் உயிரூட்டிய ஹாரிஸ் ஜெயராஜின் கற்பனையில் ஜனித்த அருமையான இசைக்கோர்வைக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்த ஹரிஷ் ராகவேந்திராவின் குரலில் வசியம் அனுபவப்படுகிறதல்லவா?
    சபாஷ்!

    இந்தப் படம் 1997-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான "Red Corner" எனும் திரைபடத்தின் தழுவலாகும்.
    கதைப்படி, கதாநாயகன் கௌதம் சுப்ரமணியம், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு மருத்துவர். மருத்துவ மாநாட்டிற்காக அவர் ரஷ்யா சென்ற போது அங்கே ஒரு அழகியை கொலை செய்ததாக குற்றச் சாட்டிற்குள்ளாகிறார். வழக்கின் ஆதார சூழ்நிலைகள் அனைத்தும் அவருக்கு எதிராக அமைந்தபோது மொழி தெரியாத அவருக்காக தமிழ் அறிந்த வழக்கறிஞரை வாதாட செய்கிறார். பிறகென்ன, வழக்கம் போல் நாமெல்லாம் முடிவு செய்வதுபோல் சுபமான முடிவு தான்!
    நிற்க..

    காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தை சேர்ந்த நாகராஜன் முத்துக்குமார் இப்படியெல்லாம் பாடல்களை புனைந்துவிட்டு தன்னுடைய நாற்பத்தியோராவது வயதில் மரணத்தை தழுவுவார் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாம் அவன் செயல்!
    கொடுத்தவன் அவனே, நேரம் தவறாது எடுத்துக்கொண்டான். ஜனனமும் மரணமும் நம் கையில் இல்லையே!
    பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர், திரை பாடல்கள் புனைவதில் அதிமோகவும், தீராத தாகவும் கொண்டு ஆர்வம் காட்டியதின் பயனாக சுமார் 1500 திரை பாடல்களை ரசிகர்களுக்கு வழங்க முடிந்தது. முற்றிலும் எதிர்பாராமல் காலனிடம் போராடி மரணித்தபோதிலும் அவரது கற்பனை வரிகள் இந்த உலகம் உள்ளவரை காற்றில் சிறகடித்து பறப்பதை யாராலும் தடுக்க இயலாது என்பதுதானே நிஜம்!

    அடுத்தது…
    திருவாரூர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஜீவா தன்னுடைய திரை உலக பயணத்தை PC ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக ஆரம்பித்தார். 1980-ம் ஆண்டு முதற்கொண்டு தொழில்நுட்பங்களை கற்றறிந்து 1991 -ல் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான "அபிமன்யூ" மலையாள திரைப்படத்தில் தன்னையொரு முழுமையான ஒளிப்பதிவாளராக்கிக்கொண்டார் என்பது நிதர்சனம்!
    இவரது முதல் தமிழ் படம் குஞ்சுமோன் தயாரிப்பல், சங்கர் இயக்கத்தில் 1993-ல் வெளிவந்த "ஜென்டில்மேன்" ஆகும். பிற்பாடு இவர் ஒளிப்பதிவு மேற்கொண்ட பெரும்பாலான படங்களை இவரே இயக்கி வெற்றி பெற வைத்தவை தான் என்று சொல்வதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
    இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் முடியும் தருவாயில், இயக்குனர் ஜீவா தன்னுடைய நாற்பத்தி நான்காம் வயதில் அகால மரணமுற்றார். PC ஸ்ரீராமின் உதவியுடன் ஜீவாவின் மனைவி அனிஷ், உதவி இயக்குனர் மணிகண்டனுடன் சேர்ந்து இந்த திரைபடத்தினை முழுமை பெற வைத்ததை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாதல்லவா?

    இந்த திரைப்படம் உருவான கதை அறிந்து எப்படியும் பார்த்தே ஆக வேண்டுமென்கின்ற எண்ணம் மேலோங்கியதால், வெளியாகி இரண்டொரு வாரம் கழித்து சென்னை சத்யம் தியேட்டரில் நண்பர்களுக்கும் சேர்த்து முன்பதிவும் செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக எனக்கு மட்டும் படம் பார்க்கும் வாய்ப்பு அமையப்பெறாதது துரதிர்ஷ்டம் தான்!
    ஆனாலும் இந்தப் பாடல்வரிகள் என்னை பல வேளைகளில் சிறைபிடிக்க நேர்ந்த தருணங்களை எண்ணி பார்க்கிறேன்…
    ஏதோ ஒன்றை இழந்ததை போன்றதொரு நெருடல்
    இன்றளவும் மனதை சஞ்சலப்படுத்துவதும்
    பாடலின் தாக்கமாகக் கூட இருக்கலாம்!
    அது எனக்கு மட்டும் தானா?
    புரியவில்லை எனக்கு…
    அன்பு செலுத்துபவர்களை தொந்தரவாக நினைக்காதீர்கள்.
    அவர்கள் எவ்வளவோ தொந்தரவுகளுக்கு மத்தியில் உங்களை நேசிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்!
    கண்ணுக்குத் தெரிவதால் வானம் நமக்கு சொந்தமாகி விடாதல்லவா?
    அது போலத்தான் பகல் கனவுகளில் உலா வரும் கதாபாத்திரங்களும்!

    ரசிகப் பெருமக்களால் வரவேற்கப்பட்ட இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    05.08.2022

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy